புதுச்சேரி திருக்குறள் மன்றத்தின் (புதிமம்) 7-ஆம் ஆண்டு தொடக்க விழா புதுச்சேரி செயராம் திருமண நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவில் புதிமம் செயலர் சிவ.மாதவன் வரவேற்றார். புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் கம்பன் கழகச் செயலர் இரத்தின.நடராசன் தலைமை வகித்தார். புதுச்சேரி மான்டெக் நிறுவனர் தலைவர் இரா.மனநாதன், புதிமம் பொருளாளர் செ.செல்வகாந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களைச் சிறப்பித்தனர். விழாவில் புலவர் ம.ராமலிங்கம் குறள் பற்றிச் சிறப்புரையாற்றினார்.
விழாவில் தமிழ்மாமணி ராச.வேங்கடேசன், குரு பழனி அடிகளார், கலைமாமணி புலவர் ந.வேங்கடேசன், பேராசிரியர் ரா.ச.குழந்தைவேலனார், திருக்குறள் போட்டிகளில் சாதனை படைத்து வரும் புதுச்சேரி ஹோலி பிளவர் மேல்நிலைப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு மாணவர் இரா.தருனேஷ் ஆகியோரின் தமிழ் சேவையைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
நிறைவாக புதிமம் துணைத் தலைவர் கலைமாமணி சுந்தர இலக்குமி நாராயணன் நன்றி கூறினார்.