சென்டாக் கலந்தாய்வை நேரடியாக நடத்த வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், முற்போக்கு மாணவர் சங்கத்தினர் புதுச்சேரி உயர்க்கல்வி - தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். முற்போக்கு மாணவர் சங்க மாநிலச் செயலர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தார்.
சென்டாக் இணையதளத்தில் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தல், சேர்க்கையில் பல்வேறு குளறுபடிகள் நிலவுகின்றன. இவற்றைக் களைந்து, மாணவர்களுக்கான இடத்தை முறையாக அளிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதளம் மூலம் கலந்தாய்வை நடத்துவதால், மாணவர்களுக்கு விரும்பிய இடம் கிடைப்பதில்லை. எனவே, சென்டாக் கலந்தாய்வை நேரடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.