புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசுக் கலைக் கல்லூரியில் "புதிய இந்தியாவுக்கான இளைஞர் மேம்பாடு' நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் இளைஞர் நலம் - விளையாட்டு அமைச்சகத்தின் கீழ், இயங்கி வரும் புதுச்சேரி நேரு இளையோர் மையம், ராஜீவ் காந்தி அரசுக் கலைக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. நிகழ்ச்சிக்கு மாவட்ட நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெலன் ராணி தலைமை வகித்தார்.
கல்லூரி முதல்வர் வி.அர்ஜுனன், தன்னார்வத் தொண்டு குறித்து மாணவர்களிடையே பேசினார். மருத்துவர்கள் வி.சுந்தர்ராஜ், ஏ.கணேசன் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு குறித்து பேசினர். "இயற்கையை மீட்போம்' என்ற தலைப்பில் டி.ஆனந்தன் சிறப்புரையாற்றினார். முன்னதாக முன்னாள் தேசிய இளையோர் படையைச் சேர்ந்த எம்.மனிஷ் வரவேற்றார். கல்லூரிப் பேராசிரியர் யு.காயத்ரி தேவி நன்றி கூறினார்.