புதுச்சேரியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாட்டில் உள்ள குழந்தைகளையும், பெண்களையும் ஊட்டச்சத்து மிக்கவர்களாக மாற்றும் நோக்கில் மத்திய அரசின் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, 'போஷன் பக்வாடா' திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை மார்ச் 8 முதல் 22-ஆம் தேதி வரை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனையேற்று ரெட்டியார்பாளையம் பவழநகர் அங்கன்வாடி மையம் கடந்த மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி பல்வேறு தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக எல்லைப்பிள்ளைச்சாவடி விவேகானந்தா நகரில் அரசுப் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.
அப்போது, நெகிழிப் பொருள்களில் சூடான உணவுப் பொருள்களை வைத்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும். எனவே, நெகிழிப் பொருள்களை தவிர்க்க வேண்டும். உணவு கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும், சுவைக்காகவும் பல்வேறு வேதிப்பொருள்களை சேர்த்து பொட்டலங்களில் அடைத்து விற்கும் பொருள்களை தவிர்த்து, பாரம்பரிய உணவுகளான கடலை, எள் உருண்டைகளையும், கமர்கட் போன்ற பொருள்களையும் சாப்பிடுவோம் என்று கூறி உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர். இதில் உதவி மருத்துவ செவிலிய அதிகாரி ஆஷா, பள்ளி ஆசிரியைகள் மேகலா, கிரிஜா, சிறுநிலா, ஆசிரியர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.