வில்லியனூர் தூய லூர்து அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
புதுவை மாநிலம், வில்லியனூரில் சிறப்பு மிக்க தூய லூர்து அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தின் ஆண்டு திருவிழா கடந்த 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நடைபெறும் 9 நாள்களில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் திருப்பலி, மறையுரை, நவநாள் தேர்பவனி உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை காலை புதுவை -
கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில், திருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இரவு ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
இதில் புதுவை முதல்வர் வே. நாராயணசாமி பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். தேர் பவனியில் தமிழகம், புதுச்சேரி மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மே 6 -ஆம் தேதி காலை திருப்பலிக்கு பின்னர், கொடியிறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை வில்லியனூர் திருத்தல அதிபர் பிச்சைமுத்து தலைமையில், உதவி பங்குத் தந்தை மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.