அரியாங்குப்பத்தில் கொத்தனாரை மிரட்டி வழிப்பறி செய்த 3 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதுவை மாநிலம், அரியாங்குப்பம் அனிதா நகரைச் சேர்ந்த செல்வம் மகன் தேவா (20). கொத்தனாரான இவர், தனது பைக்கில் அரியாங்குப்பம் மார்க்கெட் அருகிலுள்ள தேநீர் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுவிட்டு, வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 3 நபர்கள், தேவாவிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தர மறுத்த நிலையில், அவரைத் தாக்கிய கும்பல், அவரிடமிருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தேவா அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை நோணாங்குப்பம் பாலம் அருகே பைக்கில் சந்தேகப்படும் வந்த மூவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், அரியாங்குப்பம் ரமணா (23), தானாம்பாளையம் பிரேம்குமார் (19), பெரியகாட்டுப்பாளையம் பிரித்விராஜன் (19) என்பதும், இவர்கள் மூவரும் சேர்ந்துதான் தேவாவை தாக்கி பணம் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், இவர்களில் பிரித்விராஜனைத் தவிர மற்ற இருவர் மீதும் கொலை, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார், மேற்கண்ட மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.