பாகூர் அருகே செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மினி வேன் கவிழ்ந்ததில் 20 பேர் காயமடைந்தனர்.
பாகூர் அருகே உள்ள இரண்டாயிரம் விளாகம் கிராமத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை பெண்கள் உள்பட 30 பேர் மினி வேனில் துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக பரிக்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை கீழ்பரிக்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த சுரேந்திரதாஸ் (38) ஓட்டிச் சென்றார்.
சித்தேரி அணைக்கட்டு அருகே அழகியநத்தம் - குருவிநத்தம் சாலையில் பிற்பகலில் வேன் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஓட்டுநர் சுரேந்திரதாஸ் மற்றும் 10 பெண்கள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இதைப் பார்த்த அந்தப் பகுதியினர், காயமடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். மேலும், பாகூர் போலீஸாருக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த புதுச்சேரி தெற்கு போக்குவரத்து போலீஸார், கவிழ்ந்து கிடந்த வேனை மீட்டு, அந்தப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.