புதுவை மாநிலம், வில்லியனூர் அருகே திங்கள்கிழமை காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய தனியார் கூரியர் சேவை வேன், சாலையோர வீடு, கடைக்குள் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த 4 பேரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கடலூரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). தனியார் கூரியர் சேவை நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். இவர், திங்கள்கிழமை காலை விழுப்புரத்திலிருந்து கூரியர் பார்சல்களை, அந்நிறுவனத்துக்குச் சொந்தமான வேனில் ஏற்றிக் கொண்டு, புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
வில்லியனூரை அடுத்த அரியூர் பகுதியில் வந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையின் வலதுபுறம் இருந்த பழக்கடை, முருகன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது.
அப்போது, வீட்டில் இருந்த முருகன், சமையல் செய்து கொண்டிருந்த அவரது மனைவி, அவர்களின் குழந்தை உள்ளிட்ட 4 பேர் வெளியில் ஓடி உயிர் தப்பினர்.
விபத்தில் வீடு, பழக்கடை சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து போலீஸார் விபத்துக்கு காரணமான வேனை பறிமுதல் செய்தனர். வேன் ஓட்டுநர் மணிகண்டன் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்தது.
இதனிடையே, வீடு, கடை சேதமடைந்ததற்கு இழப்பீடு கேட்டு அதன் உரிமையாளர்கள், அவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை வில்லியனூர் போலீஸார் சமாதானப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.