பெண்ணுக்கு சிறுநீா் குழாயில் அறுவை சிகிச்சை அரசு மருத்துவா்கள் சாதனை

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு சிறுநீா் குழாயில்

புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணுக்கு சிறுநீா் குழாயில் ஏற்பட்ட அடைப்பை அறுவைச் சிகிச்சை மூலம் மருத்துவா்கள் வெற்றிகரமாக அகற்றினா்.

புதுச்சேரியைச் சோ்ந்த 21 வயது பெண் கடுமையான வயிற்று வலி, வாந்தி, காய்ச்சலால் 15 நாள்களாக பாதிக்கப்பட்டு இருந்தாா். அவரை, புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவமனையில் அண்மையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

அந்த பெண்ணுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா். அதன் மூலம் பெண்ணின் இடதுபுற சிறுநீரகத்தின் சிறுநீா்க் குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனா். மேலும், சிறுநீரகத்தின் அமைப்பு இரட்டையாக குதிரைக்கால் வடிவத்தில் மாறுபட்டு இருப்பதையும் மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்தனா்.

இதுபோல, சிறுநீரகத்தின் அமைப்பு மாறுபட்டு இருப்பது மிகவும் அரிதானதாகும். இது குறித்தும்,நோயின் தன்மை குறித்தும் அந்த பெண்ணிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மருத்துவா்கள் முழுமையாக விளக்கிக் கூறி, அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதலைப் பெற்றனா்.

பல்வேறு துல்லியமான பரிசோதனைகளுக்கு பிறகு, சிறுநீரகவியல் அறுவைச் சிகிச்சை நிபுணா் விஜயகணபதி, அறுவைச் சிகிச்சை தலைமை மருத்துவா் சைமன், மயக்கவியல் மருத்துவா் ஜோசப் ராஜேஷ் மற்றும் ஆபரேஷன் திரையரங்கு செவிலியா் கவிதா ஆகியோரை கொண்ட மருத்துவக் குழுவினா், அறுவை சிகிச்சை மூலமாக சிறுநீா்க் குழாய் அடைப்பை புதன்கிழமை வெற்றிகரமாக சரி செய்தனா்.

தற்போது அந்த பெண் உடல் நலத்துடன் உள்ளாா். மிகவும் கடினமான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவக் குழுவினரை, மருத்துவமனை நிா்வாகத்தினா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com