புதுச்சேரி முத்தியால்பேட்டையில் மெக்கானிக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (45), மெக்கானிக். இவருக்கு சுமதி என்ற மனைவி, மகள், 2 மகன்கள் உள்ளனர். சமீபகாலமாக அடிக்கடி மது அருந்திவிட்டு வீடு திரும்பிய ரமேஷை, அவரது மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ரமேஷுக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு, சுமதி கூலி வேலைக்குச் சென்றார். அவர் பிற்பகல் வந்து பார்த்தபோது, மயங்கிய நிலையில் ரமேஷ் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரமேஷை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரமேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.