புதுவை மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டுக்கான மாணவர் பேரவைத் தேர்தல் ஆக.31-ஆம் தேதி நடைபெற்றது. இதில், முதல் கட்டமாக 9 ஆயிரம் மாணவர்கள் வாக்களித்து 70 பிரதிநிதிகளை தேர்வு செய்தனர். பின்னர், தேர்வு செய்யப்பட்ட 70 பிரதிநிதிகள்11 பேர் கொண்ட மாணவர் பேரவை நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் கடந்த செப்.3-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தலைவர், பொதுச்செயலர் உள்பட 11 இடங்களுக்கான நிர்வாகிகள் தேர்தலில் திமுக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் கடந்த செப்.4-ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டன.
இதில், மொத்தமுள்ள 11 இடங்களில் 10 இடங்களை திமுக மாணவர் கூட்டணி கைப்பற்றியது. இதில் பொதுச்செயலராக திமுக மாணவர் அணியை சேர்ந்த குரல் அன்பன், பேரவைத் தலைவராக இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த பரிட்சை யாதவ், துணைத் தலைவராக பென் மமதா, துணைச் செயலராக குரியாக்கோஸ், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் துணைத் தலைவர் குமார், செயற்குழு உறுப்பினர்களாக ரூபம் ஹசாரிக்கா, அல் ரிஷால் ஷாநவாஸ், ரித்தீஷ், சுவேதா, அனகா, தனவர்த்தினி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
வெற்றிபெற்ற பல்கலைக் கழக மாணவர் பேரவை நிர்வாகிகள் புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்.எல்.ஏ., தலைமையில் வியாழக்கிழமை சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பின்போது, திமுக மாநில மாணவர் அணிச் செயலர் சி.வி.எம்.பி. எழிலரசன், துணைச் செயலர் ஜெரால்டு, புதுவை தெற்கு மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், பொருளர் சண். குமரவேல், வடக்கு மாநிலப் பொருளர் வழக்குரைஞர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.