புதுவையில் ஏழைகளுக்கான நிகழ் மாதத்துக்கான இலவச அரிசி விநியோகத்தை ஆளுநர் கிரண் பேடியும், தேர்தல் துறையினரும் தடுக்கின்றனர் என்று முதல்வர் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரியில் புதன்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது அவர் பேசியதாவது:
மத்தியில் மோடி ஆட்சியில் புதுவைக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ரங்கசாமி முதல்வராக இருந்தபோது புதுவை அரசின் நிதிநிலையை சீரழித்துவிட்டார்.
20 கிலோ அரிசித் திட்டம் தொடர்பான கோப்பை ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பி வைத்தோம்.
ஆனால், இலவச அரிசி வழங்கக் கூடாது, பணமாகத்தான் கொடுக்க வேண்டும் என்று கோப்பை திருப்பி அனுப்புகிறார். ஒப்பந்தம் விடப்பட்டு அரிசியும் வந்துவிட்டது. ஆனால், அரிசியை வழங்கக்கக் கூடாது என்று ஆளுநரும், தேர்தல் துறையினரும் தடுத்துவிட்டனர். இதனால், 10 நாள்களாக அரிசி லாரிகளிலியே முடங்கிக் கிடக்கிறது. இதற்காக அரசு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.
குப்பை வரி, குடிநீர்க் கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தும்படி அரசுக்கு ஆளுநர் உத்தரவிடுகிறார். உயர்த்தாவிட்டால் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்கிறார்.
ஆசிரியர் நியமனம், செவிலியர் நியமனம், காவலர் நியமனம் ஆகியவற்றுக்கு ஆளுநர் தடை விதிக்கிறார். அங்கன்வாடி ஊழியர்கள், ரொட்டி- பால் ஊழியர்கள் ஊதியத்துக்கு தடை விதிக்கிறார். அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கத் தடை விதிக்கிறார். புதுவை அரசிடம் பணம் இருந்தும் வழங்க முடியவில்லை.
இந்தத் தேர்தலில் பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்றினால்தான், கிரண் பேடியை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க முடியும். புதுவைக்கு கூடுதல் நிதியைப் பெற முடியும் என்றார்
நாராயணசாமி.