புதுவை தேர்தல் துறையின் தேர்தல்களில் பங்கேற்பதற்கான முறைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் கல்வி அமைப்பு (ஸ்வீப்), இந்திரா காந்தி கலை, அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி, புதுச்சேரி கதிர்காமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரி மாணவர்கள் 100 சதவீத வாக்குப் பதிவு, வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், என் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற பல விழிப்புணர்வு வாசகங்கள்அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மக்களை கவரும் வண்ணம் முழக்கமிட்டபடி, விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றனர்.
கதிர்காமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக இந்தப் பேரணி நடைபெற்றது.
பேரணியை தேர்தல் துறை ஸ்வீப் அமைப்பின் ஆலோசகர் இரா. நெடுஞ்செழியன், மாநில ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் குமரன், கல்லூரி தேர்தல் ஒருங்கிணைப்பாளர் சதிஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதேபோல, புதுச்சேரி தேர்தல் துறை, எஸ்எஸ்டிசி ஸ்டன்னிங் ஸ்பார்க் நடன நிறுவனம் இணைந்து நடத்திய விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி புதுச்சேரி கடற்கரைச் சாலை காந்தி திடல் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடனம் நடைபெற்றது. நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.