புதுவை மாநிலம் பாகூர், தவளக்குப்பம் பகுதியில் 350 மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி பாகூரில் இருந்து தமிழக பகுதிக்கு மது கடத்துவதைத் தடுக்க பாகூர் போலீஸார் திங்கள்கிழமை இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
சோரியாங்குப்பம் பகுதியில் ரோந்து சென்ற போது, பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர். அவர் எடுத்து வந்த 4 அட்டைப் பெட்டிகளில் 242 மதுப் புட்டிகள் இருந்தன.
அவரிடம் விசாரித்தபோது அவர், கடலூர் கேப்பர்மலை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (42) என்பதும், வாக்காளர்களுக்கு விநியோகிக்க மதுப் புட்டிகளை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, மாரியப்பனை கைது செய்த போலீஸார், மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல, பாகூர் போலீஸார் ஆராய்ச்சிக்குப்பம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பையுடன் வந்த ஒருவரை நிறுத்தி சோதனையிட்டனர். பையில் 52 மதுப் புட்டிகள் இருந்தன. அவர், கீழ்பரிக்கல்பட்டைச் சேர்ந்த உதயகுமார் (32) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகளை கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல, தவளக்குப்பம் போலீஸார் அபிஷேகப்பாக்கம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள செருப்பு நிறுவனம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த அட்டைப் பெட்டியை சோதனையிட்டனர். அதில் 53 மதுப் புட்டிகள் இருந்தன. மதுப் புட்டிகளை கைப்பற்றிய போலீஸார் கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.