மோடி தலைமையிலான புதிய ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் பங்கேற்கும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் தலைவர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கே. நாராயணசாமியை ஆதரித்து கதிர்காமம் மற்றும் இந்திரா நகர் தொகுதியில் பிரசாரம் செய்யும்போது ரங்கசாமி பேசிய
தாவது:
ஒரு அரசு சிறந்த முறையில் செயல்படுவதற்கு உதாரணமே பொது விநியோகத் திட்டத்தை சிறந்த முறையில் அமல்படுத்தி மக்களுக்குத் தேவையான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்குவது தான். ஆனால், புதுவை காங்கிரஸ் அரசில் நியாய விலைக் கடைகளே மூடப்பட்டுவிட்டன. அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை.
அங்கு மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களும் வழங்கப்படுவது இல்லை. இது ஒன்றே இந்த அரசு சிறப்பாக செயல்படவில்லை என்பதை காட்டுகிறது.
புதுவை ஆட்சியில் இளைஞர்களுக்கு அரசுத் துறைகளில் தான் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றால் தனியார் தொழில்சாலைகளை கொண்டுவந்தும் வேலைவாய்ப்பு தரவில்லை. இதனால் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. பிரதமர் மோடியும் சிறிய கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார்.
மத்தியில் ஆட்சிக்கு வரும் கட்சியுடன் ஒத்துள்ள கட்சி புதுவையில் வெற்றி பெற்றால்தான் புதுவைக்கு நிறைய திட்டங்களும், நிதியும் கிடைக்கும்.
மேலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெறுவதன் மூலம் மத்திய அரசில் பங்கு வகிக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் புதுவைக்கு பல நன்மைகள், திட்டங்கள் கிடைக்கும். இளைஞர்களிடம்தான் எதிர்காலம் உள்ளது. அதனால்தான் இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்றார் ரங்கசாமி.
பிரசாரத்தின்போது வேட்பாளர் கே.நாராயணசாமி, என்.எஸ்.ஜெ.ஜெயபால் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.