புதுச்சேரியில் இயேசுகிறிஸ்து மரித்து 3-ஆம் நாள் உயிர்ப்பை நினைவு கூரும் ஈஸ்டர் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயம், இருதய ஆண்டவர் பசிலிக்கா, நெல்லித்தோப்பு விண்ணேற்பு மாதா ஆலயம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயம், அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலயம், உப்பளம் சவேரியார் ஆலயம் மற்றும் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.
அப்போது, இயேசு உயிர்ப்பை சித்திரிக்கும் காட்சிகளும், திருமுழுக்கு சடங்குகளும் நடைபெற்றன. இதில், கிறிஸ்தவர்கள் கையில் மெழுகுவர்த்திகளுடன் பங்கேற்று பிரார்த்தனை செய்ததுடன், ஒருவருக்கு ஒருவர் ஈஸ்டர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
இதேபோல, பல தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்களில் பலர் அசைவ உணவு உண்ணாமல் உபவாசம் இருந்து வந்தனர். ஒருசிலர் ஒருவேளை உணவு மட்டுமே உண்டு வந்தனர். ஈஸ்டர் பண்டிகையோடு கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.