இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
இலங்கையில் தேவாலயங்கள் உள்ளிட்ட இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்துள்ளனர். தற்கொலைப்படை தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த நிலையில், இலங்கை வெடிகுண்டு சம்பவம் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனை நடத்த புதுவை டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவிட்டார். அதன்பேரில், ஒதியஞ்சாலை காவல் உதவி ஆய்வாளர் கீர்த்தி தலைமையிலான போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர்களுடன் ரயில் நிலையம் அருகே உள்ள இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி அன்னை தேவாலயத்தில் தீவிர சோதனை நடத்தினர். மோப்ப நாய் உதவியுடன் தேவாலயம் முழுவதும் சோதனையிடப்பட்டது.
மேலும், புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவாலயங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.