கன்னியக்கோவில் கோயில் திருவிழாவில் தீ குண்டத்தில் தவறி விழுந்த ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை மாநிலம், கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் சமேத மன்னாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 4-ஆவது வெள்ளிக்கிழமை தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டில் கடந்த 9 ஆம் தேதி இந்தக் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த விழாவில், தவளக்குப்பம் தானம்பாளையம் முத்து முதலியார் நகரைச் சேர்ந்த செங்கேணி மகனும், ரேஷன் கடை ஊழியருமான பழனி (48) என்பவர்
நேர்த்திக் கடனுக்காக தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி தீக்குண்டத்தில் விழுந்தார்.
உடல் கருகிய நிலையில் அவரை அங்கிருந்த போலீஸார் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு திங்கள்கிழமை இரவு பழனி இறந்தார்.
கிருமாம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.