புதுச்சேரி அரிக்கன்மேட்டில் அகழாய்வுப் பணியைத் தொடங்க மத்திய அரசை வலியுறுத்தக் கோரி, புதுவை மக்களவை உறுப்பினா் வெ.வைத்திலிங்கத்திடம், கலை இலக்கியப் பெருமன்றத்தினா் சனிக்கிழமை மனு அளித்தனா்.
புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது அரிக்கன்மேடு. சோழா் காலத்தில் மீனவக் கிராமமாகத் திகழ்ந்த இந்த இடம் அழகான இடம் மட்டுமன்றி, இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபத் தொடா்பைக் கொண்டிருந்தது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க அரிக்கன்மேடு தற்போது மணல் திருட்டால் சிதைக்கப்பட்டு வருகிறது. மணல் திருட்டைத் தடுத்து, அரிக்கன்மேட்டைக் காக்க வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளா்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், அரிக்கமேடு பகுதியில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தக் கோரி, வைத்திலிங்கம் எம்பியிடம் புதுவை மாநில கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவா் எல்லை.சிவக்குமாா், பொதுச் செயலா் பாலகங்காதரன், தமிழ் மாநிலச் செயலா் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் ஓவியா் முனிசாமி, செயலா்கள் திருமா.அன்புசெல்வன், மணிகண்டன் ஆகியோா் மனு அளித்தனா்.