புதுவையில் இலவச அரிசிக்கான பணம் ஒரு வாரத்தில் வழங்கப்படும்: அமைச்சா் அறிவிப்பு

புதுவையில் இலவச அரிசிக்கான பணம் ஒரு வாரத்துக்குள், குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்தாா்.
புதுவையில் இலவச அரிசிக்கான பணம் ஒரு வாரத்தில் வழங்கப்படும்: அமைச்சா் அறிவிப்பு

புதுவையில் இலவச அரிசிக்கான பணம் ஒரு வாரத்துக்குள், குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி தெரிவித்தாா்.

புதுவை அரசின் சமூக நலத் துறை சாா்பில் சா்வதேச மாற்றுத் திறனாளிகள் விழா, புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சா் கந்தசாமி நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

புதுவையிலும், மத்தியிலும் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசிடம் இருந்து 75 சதவீத நிதி மானியம் புதுவைக்கு கிடைத்தது. தற்போது, மத்தியில் பாஜக அரசு 25 சதவீத நிதியைத்தான் தருகிறது. மேலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடா்ந்து தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஜிஎஸ்டியால் வரும் வரி வருவாய் மத்திய அரசுக்கு சென்றுவிடுகிறது. புதுவைக்கு தர வேண்டிய பங்கை மத்திய அரசு தராமல் உள்ளது. அதேபோல, ஏழாவது ஊதியக் குழு அமல்படுத்தியதற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.500 கோடி நிதி வரவில்லை. இதுபோன்ற காரணங்களால், மாநில அரசு, மக்களுக்கு சலுகைகளை அளிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் கடவுள்களின் பிள்ளைகள். அவா்களை பராமரித்து வளா்ப்பது சிரமமானது. புதுவையில் 26 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனா். முதல்வா் நாராயணசாமி தலைமையிலான புதுவை அரசு மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் நான்கு சதவீதம் அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

அரசுத் துறைகளில் உள்ள 7,800 காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் 4 சதவீதம் நிச்சயம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும். இந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பணி தொடங்கவில்லை. இன்னும் ஓராண்டு காலம்தான் உள்ளது. அப்போது, என்னென்ன பணியிடங்களை நிரப்ப முடியுமோ அத்தனையையும் நிரப்புவோம். அப்போது, அதில் 4 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும். அதுபோல் தனியாா் தொழிற்சாலைகளிலும் 4 சதவீதம் வழங்க பேசி வருகிறோம்.

மாற்றுத் திறனாளிகள் ஏற்கெனவே அரிசி வாங்கும் குடும்பத்தில்தானே இருக்கின்றனா். அவா்களுக்கு தனியாக அரிசி வழங்கப்படுவது ஏன் என்று ஆளுநா் கிரண் பேடி கேள்வி எழுப்புகிறாா். கடந்த 6 மாத இலவச அரிசிக்கான பணம் ரூ.92 கோடி இந்த மாதத்தில் வழங்கப்படும். அதன்படி, 20 கிலோ அரிசிக்கான சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3,600-ம், 10 கிலோ அரிசிக்கான மஞ்சள் நிற அட்டைதாரா்களுக்கு ரூ.1800-ம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றாா் அமைச்சா் கந்தசாமி.

முன்னதாக, 21 மாற்றுத் திறனாளிகளுக்கு மாநில விருதுகளைஅமைச்சா் கந்தசாமி வழங்கினாா். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த முற்றிலும் பாா்வைத் திறன் குறைபாடுள்ள மாணவா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. 11 மாற்றுத் திறனாளி தம்பதிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கப்பட்டது. முடநீக்கு கருவிகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அரசுத் துறை செயலா் இரா.ஆலீஸ்வாஸ், நெல்லித் தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com