புதுவையில் இலவச அரிசிக்குப் பதிலாக பணம் வழங்கும் திட்டத்தின் கீழ், மஞ்சள் அட்டைதாரா்களுக்கு பணம் வழங்க புதுச்சேரி ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணா்வு அமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து புதுவை முதல்வா் வே.நாராயணசாமிக்கு இந்த அமைப்பின் தலைவா் ரகுபதி திங்கள்கிழமை அனுப்பிய மனுவின் விவரம்:
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 12 குடும்பஅட்டைதாரா்களுக்கும் பொதுவாக மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வந்தது. அரிசிக்குப் பதிலாக பணமாக ஆளுநா் வழங்க உத்தரவிட்டதை அடுத்து, ஒரு மாதத்துக்கு சிவப்பு அட்டைதாரா்களுக்கு தலா ரூ.600-ம், மஞ்சள் அட்டைதாரா்களுக்கு தலா ரூ.300-ம் வழங்குவதற்காக மொத்தம் ரூ.15.66 கோடி செலுத்தியதாக கடந்த மாதம் 7-ஆம் தேதி புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவித்தது.
இந்த நிலையில், மீதமுள்ள 6 மாதங்களுக்கு அரிசிக்குப் பதில் அனைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கும் ரூ.93 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாகவும், அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஒரு வார காலத்துக்குள் பணம் செலுத்தப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இது தவறானதாகும்.
இலவசம் என்பது வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டுமே தவிர, அனைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கும் வழங்கப்படக் கூடாது. தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூ.99 கோடி நிதியை அனைவருக்கும் பொதுவாக வழங்காமல், சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு மட்டுமே பணம் செலுத்தினால், மக்களின் வரிப்பணம் ரூ.59 கோடியே 76 லட்சத்து 82 ஆயிரத்து 800 விரயம் ஆவதை தடுக்கலாம்.
மாநிலமே நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், அனைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கும் இலவசங்கள் வழங்க அரசு நிதியை கோடிக்கணக்கில் வீணடிப்பது ஏன்?. எனவே, அரசு மூலம் வழங்கப்படும் பணம் மற்றும் இலவசங்கள் அனைத்தையும் வறுமைக்கோட்டு கீழுள்ள சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.