புதுச்சேரியில் வீட்டைச் சீர்செய்ய முயன்ற போது, மேலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (52). கூலித் தொழிலாளி. இவர், அரும்பார்த்தபுரம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள அவரது மாமனார் வீட்டைச் சீர்செய்யும் பணியில் ஈடுபட்டாராம்.
இதற்காக சனிக்கிழமை குடும்பத்தினருடன் இணைந்து வீட்டின் மேலே ஏறி, ஆஸ்பெஸ்டாஸ் சீட்டை அகற்றினாராம். அப்போது, தவறி கீழே விழுந்த முருகானந்தம் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு கதிர்காமத்தில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முருகானந்தம் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.