தலைக்கவசத்துக்கு எதிரான அதிமுக எம்.எல்.ஏ.க்களின் போராட்டம் உயர் நீதின்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று துணைநிலை ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் தனது கட்செவி அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
புதுவையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தான் கட்டாய தலைக்கவச சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தலைக்கவசம் அணியாமல் அடம் பிடிப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். மேலும், தொடர்ந்து தலைக்கவசத்தை அணியாமல் அபராதம் செலுத்துவோர்களின் ஓட்டுநர் உரிமம் முடக்கப்படும்.
புதுவை பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தலைக்கவசத்தை உடைத்து நடத்திய போராட்டம் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்தியுள்ளோம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. மத்திய மோட்டார் வாகன சட்டம், நீதிமன்றத் தீர்ப்பு ஆகியவை சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகள் ஆகும்.
சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளால் நாம் கட்டுப்படத்தப்பட்டுள்ளோம். கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த முதல்வர் தடையாக இருப்பது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார் கிரண் பேடி.