ஏழைகளுக்கு ரூ.2,000 வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பு ஓட்டுக்காகத்தான் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க தமிழ் மாநிலத் தலைவர் ஏ.லாசர் தெரிவித்தார்.
இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: மத்திய, மாநில அரசுகள் விவசாயத் தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்துவதில் எப்போதும் அக்கறை செலுத்துவதில்லை. 100 நாள் வேலையை அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் கொடுப்பதில்லை. புதுச்சேரியில் 18 நாள்களும், காரைக்காலில் 40 நாள்களும் வேலை கொடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தைப் போல, புதுவையில் இலவச அரிசி வழங்கி வந்தனர். அந்த அரிசியும் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இலவச அரிசிக்குப் பதிலாக பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என்று கூறுகின்றனர். அது ஏமாற்று வேலை.
மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ. 61
ஆயிரத்து 200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் கடந்தாண்டுக்கான ரூ.5
ஆயிரம் கோடி மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், தற்போது ரூ.60 ஆயிரம் கோடி அறிவித்துள்ளனர்.
இதனால் கடந்த ஆண்டு கொடுக்கப்படாத ரூ.5
ஆயிரத்தை பிரித்தால் இந்தாண்டு ஒதுக்கீடு ரூ.55 ஆயிரம் கோடிதான். அப்படியானால் உயர்த்தி கொடுத்துள்ளோம் என்பது தவறான தகவல்.
வறட்சி காலத்தில் 150 நாள்கள் வேலை என்பதை, நிரந்தரமாக எப்போதும் வழங்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் 200 அல்லது 250 நாள்கள் வேலை வழங்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியமாக ரூ.500 என்பதை அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6
ஆயிரம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது தேர்தலில் வாக்கு பெறுவதற்காகத்தான்.
அதுபோல, தமிழகத்தில் அதிமுக அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது தேர்தல் நோக்கத்துக்காகத்தான்.
விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்குப் பதிலாக ரூ.10 ஆயிரம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது, விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் அமிர்தலிங்கம், மாநில துணைத் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.