கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் புதுவை பிரதேச செயலர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநிலத்தில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் கடந்த 7ஆண்டுகளாக உச்சபட்ச நிலையில் இருந்து வருகிறது.
2008-இல் 1,593 சாலை விபத்துகளும், 155 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
2011 முதல் 2015 வரை 5 ஆண்டுகளில் 7,351 சாலை விபத்துகளும், அதனால் 1,074 பேரும் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பாக, ஆண்டுக்கு சராசரி 1,470 சாலை விபத்துகளும், 200 உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இது வேதனைக்குரியது.
இவ்வாறு விபத்துகளும், மரணங்களும் நிகழ்வது மிகப் பெரிய இழப்பு மட்டுமல்ல, சமூக சீரழிவுமாகும். விபத்துகள் ஏற்படுவதற்கு சாலை விதிமீறல் மட்டும் காரணமல்ல. மதுப் பழக்கம் பிரதான காரணமாகும். புதுவை மாநிலத்தில் 1,800 பேருக்கு ஒரு மதுக் கடை என்ற விகிதத்தில் 650-க்கும் மேற்பட்ட மதுக் கடைகள் உள்ளன.
மது அரக்கணை ஒழிக்காமல், மக்களின் சமூக ஏற்றத் தாழ்வுகளை குறைக்காமல், முற்போக்கான சகோதரத்துவ உணர்வை வளர்க்கிற கல்வியை அளிக்காமல், எத்தகைய மாற்றங்களும், முன்னேற்றங்களும் சாத்தியமில்லை.
ஆகவே, ஆளுநர் கிரண் பேடி தலைக்கவசம் அணிய வேண்டும் என்று சொல்வதால், கட்டாயப்படுத்துவதால் பிரச்னை தீராது. மாநில அரசோடு இணைந்து தீர்வுகாண வேண்டும். மக்கள் ஒத்துழைப்போடு தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராஜாங்கம்.