மாணவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கிவிட வேண்டாம் என்று சமூகநலத் துறை அமைச்சர் மு.கந்தசாமி அறிவுறுத்தினார்.
போதைப் பழக்கம் குறித்து மாணவர்கள், இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் நிதியுதவியுடன் புதுவை சமூக நல வாரியம் சார்பில் 2 நாள்கள் பயிலரங்கம் புதன்கிழமை காலை தொடங்கியது.
பயிலரங்கத்தை சமூக நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி தொடக்கிவைத்துப் பேசியதாவது:
போதைப்பொருள் பழக்கம் உலகம் முழுவதும் பாலிய பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் அச்சுறுத்தும் விஷயமாகும்.
ஆய்வுகள் படி, புகையிலை மற்றும் ஆல்கஹால் நுகர்வோர்களின் ஆரம்ப வயது 9 மற்றும் 10 வரை, ஹெராயின் அல்லது ஓபியம் போதைப் பழக்கம் 12-13 வயதில் தொடங்குகிறது.
நட்பு வட்டத்தின் அழுத்தம், போதைப் பொருளின் பயன்பாட்டின் விளைவுகளை உணர ஆர்வம், பசி, குளிர் மற்றும் சிலநேரங்களில் வறுமை ஆகியவை போதைப்பொருள் பழக்கத்துக்கான காரணங்களாக உள்ளன. மாணவர், இளைஞர்கள் இப்பழக்கத்தில் ஒருபோதும் சிக்கிவிடக்கூடாது என்றார் கந்தசாமி.
பயிலரங்கத்தில் சமூக நலத்துறை செயலர் ஆலிஸ் வாஸ், சமூக நல வாரிய தலைவி வைஜெயந்தி, வாரியத்தின் செயலாளர் லோகேஷ், சமூக நல வாரியத்தின் அதிகாரிகள், ஊழியர்கள், ஜிப்மர் மனநல மருத்துவத் துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.