பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைத் திரித்து கூறும் புதுவை ஆளுநர் கிரண் பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பேரவைக் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: பொங்கலை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சர்க்கரை, வெல்லம், பச்சரிசி உள்ளிட்ட பரிசு பொருள்கள் வழங்குவது காலங்காலமாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டும் அவ்வாறு வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசப் பரிசு பொருள்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளதாக ஆளுநர் கூறி வருகிறார். இதை முதல்வரும், அமைச்சரும் மறுக்கவில்லை.
தமிழகத்தில் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி உள்ளிட்ட ரூ. 400 மதிப்புள்ள பொங்கல் பொருள்களுடன், ஆயிரம் ரூபாய் 1.91 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அனைவருக்கும் பொங்கல் பொருள்களை வழங்கலாம், ஆனால் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ. ஆயிரம் பணம் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில், புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, தனக்குச் சாதகமாக
வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்குத்தான் பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக திரித்துக் கூறி வருகிறார். எனவே, நீதிமன்றம் தாமாக முன் வந்து ஆளுநர் கிரண் பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்ய வேண்டும்.
ஆளுநர் கிரண் பேடி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான் இலவசப் பரிசு பொருள்கள் என கருத்து தெரிவித்தவுடன், அமைச்சரவையைக் கூட்டி அனைவருக்கும் பொங்கல் பரிசு பொருள்கள் வழங்கப்படும் என அரசு கொள்கை முடிவு எடுக்காதது ஏன்? என அன்பழகன் கேள்வி எழுப்பினார்.