புதுச்சேரி ஏஎப்டி பஞ்சாலை தொழிலாளர்கள், ஆலையின் வாயிலில் கருப்புப் பானையில் பொங்கல் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் பாரம்பரியமான ஏஎப்டி பஞ்சாலை, சுதேசி பஞ்சாலை, பாரதி பஞ்சாலை ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இங்கு ராணுவ உடை உள்ளிட்ட பல்வேறு துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இந்த ஆலைகள் நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூன்று ஆலைகளையும் புதுவை அரசு மூட உத்தரவிட்டது.
இங்கு பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு லே ஆப் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதுவை ஏஐடியுசி தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும், லேஆப்பில் உள்ள தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து முழு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த ஆலை ஊழியர்களுக்கான ஊதியத்தை வழங்க நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அதை வழங்க ஆளுநர் கிரண்பேடி மறுக்கிறார் என புதுவை அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது. எனவே, ஆளுநருக்கு எதிராகவும் பஞ்சாலை தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை ஏஎப்டி ஆலையின் நுழைவு வாயில் முன் தொழிலாளர்கள் கருப்பு பானையில் பொங்கல் வைத்ததுடன், அதில் கருப்பு கொடியையும் ஏற்றி வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.