ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
புதுவை அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் மற்றும் ஊழியர் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது. கூட்டமைப்பின் கெளரவத் தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார்.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு ஏசிபி, எம்ஏசிபி மற்றும் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தடையை நீக்கி காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அதில் பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 22 ஆம் தேதி புதுவை கல்வித் துறை அலுவலகம் எதிரில் தர்னாவில் ஈடுபடுவது, பேராயர் தலைமையில் வருகிற 25 ஆம் தேதி புதுச்சேரி ஆட்டுப்பட்டி அந்தோணியார் கோயிலிலிருந்து கண்டன பேரணியை நடத்துவது, அதன் பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் வரும் நாள்களில் சிறைநிரப்பும் போராட்டம் உள்பட பல கட்ட போராட்டங்களை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.