புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தொடர் மடிக் கணினி திருட்டில் ஈடுபட்ட திருச்சியைச் சேர்ந்தவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழகம், பெங்களூரு, கேரளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து செல்லும் தொழில்நுடப் ஊழியர்கள், தொழிலதிபர்களின் மடிக் கணினிகள் திருடு போனது. இதுதொடர்பாக உருளையன்பேட்டை போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீஸார் பேருந்து நிலையத்தில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மடிக் கணினி திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பேருந்து நிலையத்தில் உள்ள உணவகம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரைப் பிடிக்க முயன்றனர். அவர்கள் ஒருவர் பிடிபட்ட நிலையில், 2 பேர் தப்பிவிட்டனர்.
பிடிபட்ட நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், அவர் திருச்சி ராம்ஜி நகர் புங்கனூரைச் சேர்ந்த செந்தில்குமார் (38) என்பதும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், முத்துகுமார் ஆகியோருடன் சேர்ந்து சுமார் 19 மடிக் கணினிகளைத் திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, செந்தில்குமாரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 19 மடிக் கணினிகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.