அஞ்சலக உதவியாளர் பணிக்கு தமிழ் மொழி இல்லாமல், ஆங்கிலம், ஹிந்தி மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு புதுவை முதல்வர் வே.நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஹிந்தி, ஆங்கில மொழியில் மட்டுமே தபால் துறை தேர்வு நடத்தப்படும் என்பது சரியான முடிவல்ல. இதனால், தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் இந்த முடிவு கண்டனத்துக்குரியது.
ஹிந்தி மொழி திணிப்பால் பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படும். இதன் காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் உருவாகும்.
தமிழகம் மற்றும் புதுவை மாநில மக்களின் விருப்பத்துக்கு எதிராக ஹிந்தி மொழியைத் திணிக்க வேண்டாம். இதுதொடர்பான குறிப்பாணையை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார் நாராயணசாமி.