புதுவை கல்விக் கேந்திரமாக மாறியுள்ளதாக முதல்வர் வே.நாராயணசாமி பெருமிதத்துடன் கூறினார்.
புதுவை மாநிலம், கீழ்புத்துப்பட்டில் உள்ள விவேகானந்தா ஊரக சமூக கல்லூரியில் கணினி உற்பத்தி மற்றும் பழுது நீக்கல் சேவைகள் பயிற்சி அளிப்பதற்காக டெல் கெளசல் கேந்திரா என்ற நவீன கணினி வன்பொருள் ஆய்வகத்தை டெல் இந்தியா நிறுவனம் அமைத்துள்ளது. இந்த ஆய்வகத்தை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி, டெல் இந்தியா நிறுவனத் தலைவர் அலோக் ஓஹ்ரி ஆகியோர் புதன்கிழமை தொடக்கிவைத்தனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
டெல் நிறுவனத்தைப்போல, புதுவை அரசும் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்து வருகிறது. கிராமப்புற பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களும் கணினி பயிற்சி பெற்று மாதந்தோறும்
ரூ.4 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகின்றனர்.
புதுவையில் 18 பொறியியல் கல்லூரிகள், 8 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி, செவிலியர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் உள்ளன. கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதுவை ஒரு கல்விக் கேந்திரமாக உள்ளது. இங்கு, கல்வி பயில்பவர்கள் பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
டெல் நிறுவனத்தினர் புதுவையில் இடம் ஒதுக்கிக் கொடுத்தால், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம் அமைப்பதாகக் கூறுகின்றனர். அந்த மையத்தில் 60 சதவீதம் புதுவையைச் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்தால், அரசு இலவசமாக நிலம் ஒதுக்கித் தரும்.
செல்லிடப்பேசி, தொலைக்காட்சி உள்ளிட்ட எந்த சாதனங்களை பழுதுபார்க்கக் கற்றுக்கொண்டாலும் பணம் சம்பாதிக்க முடியும். சீனாவில் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகளவு உள்ளது.
இதனால், உலக நாடுகள் இந்தியாவை திரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளன. எனவே, நாட்டில் உள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் திறன்
மேம்பாட்டுப் பயிற்சி பெற்றால், அதிகளவு சம்பாதிக்க முடியும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் டெல் உற்பத்தி செயல்பாடுகள் துறையின் முதுநிலை இயக்குநர் நவ்னீத் கெஜ்ரிவால், எஸ்விஆர்சிசி அறங்காவலர் ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.