புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, புதுவை டிஜிபி அலுவலகம் முன் சகோதரர்கள் புதன்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கோகுல்காந்தி நாத் (47). இவர், பெரியார் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி தலைவர் ஆவார். இவரது அண்ணன் இருதயராஜ் (48). இவர்களுக்கும், மற்றொரு தரப்புக்கும் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக மோதல் ஏற்பட்டு,
இருதரப்பினர் மீதும் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தங்களை தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும் என சில வாரங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகை எதிரே நள்ளிரவு கோகுல்காந்தி நாத்தின் உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை பெரியக்கடை போலீஸார்
சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இந்த நிலையில், கோகுல்காந்தி நாத்தும், அவரது அண்ணன் இருதயராஜும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக புதன்கிழமை ஒதியஞ்சாலை காவல் நிலையம் வந்தனர். அங்கு, விசாரணை அதிகாரி வெளியில் சென்றிருந்தாராம்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் அருகிலுள்ள கடைக்குச் சென்றபோது, அங்கு சிலர் அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இதையடுத்து, கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு கோகுல்காந்தி நாத், இருதயராஜ் ஆகியோர் வந்தனர்.
அங்கு, தங்களது புகாரின் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்,
தங்களை தாக்கியவர்களை போலீஸார் இதுவரை கைது செய்யாதது தொடர்பாகவும் டிஜிபி சுந்தரி நந்தாவிடம் முறையிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அனுமதி மறுத்ததால், சகோதரர்கள் வாயில் முன் தர்னாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போலீஸார் இங்கு போராட்டத்துக்கு அனுமதி இல்லை எனக் கூறி, அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.