புதுச்சேரி, ஜூன் 13: புதுவை மக்களவைத் தொகுதியியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது செலவுக் கணக்கை ஜூன் 23-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதுகுறித்து புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை முடித்து தாக்கல் செய்வதற்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை (ஜூன்) காலை 10 மணி அளவில் புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வுக் கூடத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்தப் பயிற்சியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் செலவினக் கணக்குகளை முடித்து சமர்ப்பிக்கும் வகையில், ஜூன் 18-ஆம் தேதி காலை 10 மணிக்கு கணக்கு ஒப்பாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 78-ஆம் பிரிவின் கீழ் அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 30 நாள்களுக்குள், தங்களது தேர்தல் செலவினக் கணக்கை அன்றாட கணக்குகள் பதிவேடு, வங்கி பதிவேடு ரொக்கப் பதிவேடு உரியவாறு உறுதியளிக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்துடன் கூடிய சுருக்க விவர அறிக்கையைத் திருந்திய படிவேடு, விவர அட்டவணைகள் தேர்தலுக்காக தனியாக தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கு விவர அறிக்கை ஆகியவற்றையும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஜூன் 23-ஆம் தேதி அன்றோ, அதற்கு முன்பாகவோ தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.
இதைத் தவறாது கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தேர்தல் செலவுக் கணக்கை உரிய காலத்துக்குள்ளும், சட்டத்துக்கு உள்பட்ட முறையிலும் சமர்ப்பிக்க தவறும் வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையம் உத்தரவிடும் தேதியில் இருந்து 3 ஆண்டு காலம் தகுதியை இழக்க நேரிடும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.