புதுச்சேரி ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திறன்மிகு (ஸ்மார்ட்) வகுப்பறை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இதை முதல்வர் வே. நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், ரவுண்ட் டேபிள் ஏரியா ஆளுநர் என். வெங்கட்டரமணி வரவேற்றார். பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பி.டி. ருத்ரகவுடு, புதுவை அரசின் தில்லிப் பிரதிநிதி ஏ. ஜான்குமார், ஜீவானந்தம் அரசு உயர்நிலைப்பள்ளி துணை முதல்வர் சந்திரசேகர், "புதுச்சேரி ஹரிட்டேஜ் ரவுண்ட் டேபிள் 167' தலைவர் திலிப், செயலர் செல்லா, பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், ஊர்மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இதில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
புதுவை அரசு சார்பில் 120 ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொண்டு நிறுவனங்களும், அரசுடன் கூட்டு சேர்ந்து இத்தகைய வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தித் தர வேண்டும். இதுபோன்ற பணிகளை சிறப்பாகச் செய்து வரும் "புதுச்சேரி ஹெரிட்டேஜ் ரவுண்ட் டேபிள் 167' தொண்டு நிறுவனத்தைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.