புதுச்சேரி அருகே மன நலன் பாதிக்கப்பட்ட மகனை விஷம் கொடுத்து கொன்று, தாயும் தற்கொலை செய்து கொண்டார்.
புதுவை மாநிலம், அரியாங்குப்பம் அருகே வீராம்பட்டினம் ஜீவரத்தினம் வீதியைச் சேர்ந்தவர் ஞானவேல், மீனவர். இவரது மனைவி சீதாலட்சுமி (33). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் லோகேஷ்வரன் (15). மனநலன் குன்றிய இவர், பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்தார். மற்ற இரு மகன்களும் அதே பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தனர். அண்மைக் காலமாக ஞானவேலுவுக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்துப் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சீதாலட்சுமிக்கும், ஞானவேலுவுக்கும் இடையே கடந்த 13 ஆம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, ஞானவேல் மீன் பிடி தொழிலுக்குச் சென்றுவிட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த சீதாலட்சுமி ஆத்திரத்தில் மகன் லோகேஷ்வரனுக்கு விஷம் கொடுத்து, தானும் உள்கொண்டதாகத் தெரிகிறது. இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் வியாழக்கிழமை இறந்தனர்.
இதுகுறித்து ஞானவேல் அளித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.