புதுச்சேரி முத்திரையர்பாளையத்தில் ஜெபக் கூடம் மீது கல்வீசி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி முத்திரையர்பாளையம் தண்ணீர் தொட்டி வீதியில் கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான ஜெபக் கூடம் உள்ளது. இங்கு வாரந்தோறும் ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது தவக்காலத்தையொட்டி சிறப்பு ஆராதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பைக்கில் அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் ஜெபக்கூடத்தின் மீது கற்களை வீசினர். இதனால், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததைக் கண்ட மர்ம நபர்கள் இருவரும் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து ஜெபக் கூட போதகரான கேலப், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.