கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுவை மாநில கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தினர் புதுச்சேரி சுதேசி மில் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் தீர்த்தமலை தலைமை வகித்தார். பொதுச் செயலர் ஆறுமுகம், பொருளாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அனைத்து நல வாரியங்களுக்கும் லெவி ஒரு சத வீதம் வசூல் செய்ய வேண்டும். மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் 3 சதவீதம் அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். பதிவு, புதுப்பித்தல், பணப் பயன்களைத் தொழில்சங்கங்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். மத்திய அரசின் ஓய்வூதியத் திட்டம், தனியார் மயம், வரைவு சட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
திருமண உதவித் தொகை, மழைக்கால உதவித் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் துணைத் தலைவர் கனகசபை, தேசிங்கு உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.