புதுவை சட்டப்பேரவைக்கு பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு, அதிகாரிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவக்கூடும் என்ற தகவல் வெளியானது. இதனால் நாடு முழுவதும் முக்கிய கட்டடங்கள், திருத்தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு பாதுகாப்பைப் பலப்படுத்த மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதுவையில் முக்கிய இடங்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. கடலோரக் காவல்
படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புதுவை சட்டப்பேரவையில் பாதுகாப்புப் பணிகளை மேம்படுத்தவும் புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் தலைமையில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பேரவை வளாகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.
சிக்மா செக்யூரிட்டி காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் சவுகால், பேரவை மார்ஷல் ரமேஷ் மற்றும் போலீஸார் அங்குள்ள இரு நுழைவு வாயில்கள் மற்றும் உள்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு, அவற்றை பழுதுநீக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, மேலும் கண்காணிப்பை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்தனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டப்பேரவைத் தலைவர் (பொ) வே.பொ.சிவக்கொழுந்துவுக்கு அனுப்பி சட்டப்பேரவை செயலகம் மூலம் நிதி ஒப்புதல் பெற்று புதிதாக சிசிடிவி கேமராக்களை வாங்கி பொருத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுவை பேரவைக்குள் வந்து செல்லும் நபர்கள், புதிய நபர்களின் நடமாட்டம் உள்ளிட்டவற்றை கண்காணித்து அசம்பாவிதங்களை தடுக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.