புதுச்சேரி காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் மாவட்ட சாலைப் பாதுகாப்புக் குழு எடுத்த முடிவின்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோரிமேடு, லெனின் வீதி, ரெட்டியார்பாளையம், புஸ்ஸி வீதி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காமராஜர் சாலை முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி தலைமையில், பொதுப் பணித் துறை, மின் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள் ஒருங்கிணைந்து பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
சாலையில் கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள், சிமென்ட் சிலாப்புகள், படிக்கட்டுகளை உடைத்து அகற்றினர். மேலும், நடைபாதை ஆக்கிரமிப்புகளும் இடித்து அகற்றப்பட்டன. இதைப் பார்த்த வியாபாரிகள் பலர் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றத்தின் போது, அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக காமராஜர் சாலையில் ஒதியஞ்சாலை, பெரியக்கடை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.