மது போதையில் தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்ட தம்பியை அவரது அண்ணன் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை மாநிலம், திருக்கனூர் காந்தி நகர் 2-ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயதாஸ் (36), விமல் (33) ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
இவர்களில் ஓட்டுநரான விமலுக்கு சத்தியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக சத்தியா விமலை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறாராம்.
இந்த நிலையில், மதுப் பழக்கத்துக்கு அடிமையான விமல், அரசு சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் தனது தாய் விஜயாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தாராம்.
இதேபோல, வியாழக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த விமல், தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்தாராம்.
அப்போது, வீட்டிலிருந்த விமலின் அண்ணன் விஜயதாஸ் இதைத் தட்டிக் கேட்டாராம். இதனால், அண்ணன் - தம்பி இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், ஆத்திரமடைந்த விஜயதாஸ் வீட்டிலிருந்த உருட்டுக் கட்டையை எடுத்து விமலைத் தாக்கினாராம். இதில், மயக்கமடைந்த அவர் கீழே விழுந்தார்.
இதையடுத்து, விஜயதாஸ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். வெள்ளிக்கிழமை காலை வீட்டிலிருந்தவர்கள் பார்த்த போது, விமல் இறந்துகிடந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருக்கனூர் போலீஸார் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விமலின் மனைவி சத்தியா அளித்த புகாரின் பேரில், திருக்கனூர் போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய விஜயதாஸை தேடி வருகின்றனர்.