புதுச்சேரியில் இலவச அரிசியை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: புதுவையில் காங்கிரஸ் அரசு ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் முழுமையாக 10 மாதங்கள் கூட ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி, சட்டப் பேரவையில் ஒப்புதல் பெற்றும் இலவச அரிசியை வழங்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. 3 மாதங்கள் இலவச அரிசியை வழங்க ஆளுநர் அனுமதி வழங்கியும், அரசின் காலதாமதம் காரணமாக மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புது விதமாக ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய இலவசஅரிசியை விநியோகம் செய்ய தேர்தல் துறை தடை விதித்தது. தேர்தல் துறை தடையை நீக்க முழு முயற்சியை அரசும், அதிகாரிகளும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், மறு வாக்குப் பதிவை காரணம் காட்டி, இலவச அரிசி வழங்க தேர்தல் துறை மீண்டும் தடை விதித்துள்ளது. அதே நேரத்தில், புதுச்சேரி முழுவதும் மதுக் கடைகளை மூடுவதற்கும் தேர்தல் துறை உத்தரவிட்டது. ஆனால், காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு, வெங்கட்டா நகரில் உள்ள 2 மதுபானக் கிடங்குகளை மட்டும் மூடவும், பிற பகுதிகளில் வழக்கம்போல மதுக் கடைகளை திறந்து வைக்கவும் தேர்தல் துறையிடம் மறு உத்தரவு பெற்றது.
மதுக் கடைகளை திறக்க ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் காட்டிய முனைப்பையும், முயற்சியையும் ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்குவதில் காட்டாதது ஏன்?. புதுவை அரசின் இந்த செயலை அதிமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இலவச அரிசியை ஏழை மக்களுக்கு உடனடியாக வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.