புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தனது உறவினர்களுடன் புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில் திங்கள்கிழமை தரிசனம் செய்தார்.
புதுவை மாநிலத்தில் கடந்த மார்ச் 10 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அதன் பின்னர், புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தனது ஆய்வுப் பணி, ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவற்றை நிறுத்திவிட்டார்.
நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதிகாரிகளும், தேர்தல் தொடர்பான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆளுநருக்கு சிறப்பு அதிகாரமில்லை என கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியானது. இதனிடையே, மக்களவைத் தேர்தல் முடிந்து, காங்கிரஸ் ஆட்சியமைத்ததும் கிரண் பேடி மாற்றப்படுவார் என அந்தக் கட்சியினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி திங்கள்கிழமை தனது உறவினர்கள் சிலருடன், ஆளுநர் மாளிகையை ஒட்டியுள்ள அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று, தரிசனம் செய்தார். அப்போது, அங்கிருந்த ஆசிரம ஊழியர்கள், சுற்றுலாப் பயணிகளின் குழந்தைகள் கிரண் பேடியிடம் ஆர்வமுடன் சுய படம் (செல்ஃபி) எடுத்துக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மணக்குள விநாயகர் கோயிலுக்கு உறவினர்களுடன் சென்ற ஆளுநர், அங்கும் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது, ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்க முயன்றபோது, அவர் பதிலளிக்க மறுத்து அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டார்.