புதுவையில் நெகிழிக்கு முழு தடை விதிக்கப்படாவிடில் அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக அறிவித்தது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் எம்எல்ஏ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுவையில் கடந்த ஆக. 1-ஆம் தேதி முதல் நெகிழிப் பைகள் மற்றும் ஒருமுறைப் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை அரசு இச்சட்டத்தை அமல்படுத்தவில்லை. மாசுக் கட்டுப்பாடுத் துறை நகராட்சியைக் காரணம் காட்டி வருகிறது.
மற்ற இடங்களைவிட புதுச்சேரியில் நெகிழி அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள், மாதந்தோறும் ஆயிரம் டன் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் புதுவை மாநிலம் மாசடைந்து வருகிறது.
புதுவை மாநிலத்தில் தொடா்ந்து நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் பாஜக சாா்பில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.