நீண்ட நாள்களாக பணிக்கு வராத ஆசிரியர்கள், ஊழியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்ப்பிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பணிக்காலத்தில் ஒரு நாள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலும், முறையான அனுமதி வாங்க வேண்டும். உயர் கல்வி படிக்க, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற, வெளிநாடு செல்ல, சொத்துகள் வாங்க உயர் அதிகாரிகளிடம் கடிதம் அளித்து முன் அனுமதி பெற வேண்டும்.
ஆனால், கல்வித் துறையில் ஆசிரியர்கள், பணியாளர்கள் பல விதமாக விடுப்பு எடுக்கின்றனர். கல்வி ஆண்டின் இறுதியில், தங்கள் பிள்ளைகள் பொதுத்தேர்வு அல்லது கல்லூரித் தேர்வு எழுத பயிற்சி தர வேண்டும், குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும், வீடு கட்ட வேண்டும், வெளியூரில் உள்ள சொத்துப் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் எனக் கூறி, மாதக்கணக்கில் விடுப்பு எடுக்கின்றனர். பல நேரங்களில் மருத்துவ விடுப்பாக இதற்கு அனுமதி பெறுகின்றனர். சிலர் கடிதம் மட்டும் கொடுத்துவிட்டு, அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து விடுகின்றனர்.
வீடு, முகவரி மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை மாற்றிவிட்டுச் செல்கின்றனர். இப்படிச் செல்லும் பலர் தனியார் நிறுவனப் பணி, வெளிநாட்டில் உயர் படிப்பு மற்றும் வேலைக்குச் செல்வது உண்டு.
பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்தப் பணி முடிந்ததும் மீண்டும் அரசுப் பணியில் சேர முயற்சிக்கின்றனர். இதுபோல, சில ஆசிரியர்கள், சில ஆண்டுகளுக்கு மேல் விடுப்பு எடுத்துவிட்டு, திடீரென மீண்டும் பணி கேட்டுள்ளதால், கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். எனவே, நீண்ட நாள்கள் பணிக்கு வராமல் விடுப்பில் உள்ளோரின் பட்டியலை அனுப்பும்படி, பள்ளிகளின் துணை ஆய்வாளர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ருத்ர கெளடு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், நீண்ட நாள்களாக பணிக்கு வராமல் உள்ள ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.