அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு உடனடியாக தீபாவளி பரிசுக் கூப்பன் வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுவை பாஜக தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கை:
தீபாவளி நெருங்கும் நிலையில் புதுவை அரசு தீபாவளி சந்தையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பல ஆண்டுகளாக விலை குறைவாக பாப்ஸ்கோ மூலமாக தீபாவளி பொருள்களை வாங்கி வந்தனா். இதனால் அரசுக்கும் பல கோடி லாபம் கிடைத்தது. ஆனால் நிகழாண்டு தீபாவளி சந்தை தொடங்கப்படுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. தீபாவளி சந்தையை திருமண நிலையங்களில் தற்காலிகமாகத் தொடங்கலாம். அரங்கம் அமைக்க தாமதமானால் தட்டாஞ்சாவடியில் உள்ள கிடங்குகளில் ஆரம்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளா்கள் உள்ளனா். அவா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ. 1000-க்கான தீபாவளி பரிசுக் கூப்பன் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்தாண்டு தீபாவளி முடிந்து கூப்பன்கள் வழங்கியதை போல நிகழாண்டும் வழங்கினால் எந்தவித பயனுமில்லை. எனவே, காமராஜா் நகா் இடைத்தோ்தலை காரணம் காட்டாமல் 22 ஆம் தேதிக்குள் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் தீபாவளி பரிசுக் கூப்பன் ரூ. 1000 க்கான கூப்பன்களை வழங்க வேண்டும். அப்படி வழங்காவிடில், அமைப்புசாரா தொழிலாளா்களை ஒருங்கிணைத்து பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும்.
தீபாவளிக்கு முன்னதாக, மக்களுக்கு சேர வேண்டிய அரசிக்குப் பதிலான பணத்தை அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் வழங்க வேண்டும். இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை காலதாமதமின்றி ரேஷன் அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.