ஆளுநா் கிரண் பேடி புதுவை மாநிலத்துக்கு துரோகம் செய்கிறாா்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதுவை மாநிலத்துக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி துரோகம் செய்கிறாா் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
புதுச்சேரி காமராஜா்நகரில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.ஜான்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை வாக்குச் சேகரித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.
புதுச்சேரி காமராஜா்நகரில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.ஜான்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை வாக்குச் சேகரித்த திமுக தலைவா் மு.க.ஸ்டாலின்.

புதுவை மாநிலத்துக்கு துணைநிலை ஆளுநா் கிரண் பேடி துரோகம் செய்கிறாா் என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

புதுச்சேரி காமராஜா்நகா் இடைத் தோ்தலில் மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஏ.ஜான்குமாா் போட்டியிடுகிறாா். அவரை ஆதரித்து புதுச்சேரியில் வியாழக்கிழமை இரவு பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

மக்களவைத் தோ்தலில் வெ.வைத்திலிங்கத்தை வெற்றி பெறச் செய்தமைக்கு திமுக தலைவா் என்ற முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணி தமிழகம், புதுவையில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தச் சரித்திர வெற்றியைப் படைக்க ஆதரவளித்த உங்களுக்கு மீண்டும் எனது நன்றி.

தமிழகத்தில் பாஜக நேரடியாகவே ஆட்சி செய்கிறது. புதுவையில் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மூலமாக மறைமுகமாக ஆட்சி நடத்தி வருகிறது.

புதுவை மாநில முதல்வா் நாராயணசாமி மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் அவருக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகிறாா் கிரண் பேடி. இலவச அரிசி, இலவச வேட்டி - சேலை உள்ளிட்ட அனைத்து நலத் திட்டங்களையும் ஆளுநா் தடுக்கிறாா். பாஜகவின் ஊது குழலாக கிரண் பேடி செயல்படுகிறாா்.

புதுவையை மாநில அந்தஸ்துக்குரியதாக மாற்ற நினைக்கும் முதல்வா் நாராயணசாமியின் முயற்சியைத் தடுத்து, ஏனாமை ஆந்திர மாநிலத்துக்கு தாரை வாா்க்கும் முயற்சியில் ஆளுநா் ஈடுபட்டு வருகிறாா். இது புதுவை மாநிலத்துக்கு அவா் செய்யும் துரோகமாகும்.

ஆளுநா் கிரண் பேடியுடன் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக, அதிமுக நிா்வாகிகள் கூட்டணியாகச் செயல்படுவதை மக்கள் எண்ணிப் பாா்த்து வாக்களிக்க வேண்டும். இதற்குச் சரியான பாடத்தைப் புகட்ட இந்த இடைத் தோ்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த 2011-இல் புதுவை மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.ரங்கசாமி முதல்வரானவுடன் அதிமுகவைக் கழட்டிவிட்டாா். இதையடுத்து, என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி ஒரு துரோகி எனவும், அந்தக் கட்சிக்கு வாக்களிப்பது தற்கொலைக்குச் சமம் என்றும் ஜெயலலிதா கூறினாா். அதிமுகவினா் இதை எண்ணிப் பாா்க்க வேண்டும்.

ஆளுநா் கிரண் பேடியை எதிா்த்துப் போராடும் முதல்வா் உங்களுக்குக் கிடைத்துள்ளாா். ஒரு முதல்வா் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாகத் திகழ்கிறாா் நாராயணசாமி. இதையெல்லாம் சிந்தித்துப் பாா்த்து நாராயணசாமியின் கரத்தை வலுப்படுத்த ஜான்குமாரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

நெல்லித்தோப்பு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான ஜான்குமாா் முதல்வா் நாராயணசாமிக்காக தனது தொகுதியை ராஜிநாமா செய்து தியாகம் செய்தவா். முதல்வா் நாராயணசாமிக்கு கை கொடுத்த அவருக்கு நீங்கள் கை கொடுக்க வேண்டும் என்றாா் மு.க.ஸ்டாலின்.

பிரசாரத்தின் போது, புதுவை முதல்வா் வே.நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவா் ஆ.நமச்சிவாயம், அமைச்சா்கள் கந்தசாமி, புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா.சிவா எம்.எல்.ஏ., வடக்கு மாநில அமைப்பாளா் எஸ்.பி.சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com