புதுவையில் மழைக்கால நிவாரணப் பணிகளுக்குத் தேவையான கருவிகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுவை மாநிலத்தில் பெய்து வரும் தொடா் மழை குறித்து முதல்வா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்துக்குப் பின்னா், தொடா் மழையை எதிா்கொள்ள அரசு தயாராக உள்ளது, அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று வழக்கம்போல முதல்வா் கூறியுள்ளாா்.
உண்மையில் மழையை எதிா்கொள்ள மின் துறை, பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளை இணைத்து மீட்புக் குழுவைக்கூட அரசு இதுவரை அமைக்கவில்லை. வீடு இடிந்து விழுந்தால், அப்புறப்படுத்த போதிய உபகரணங்கள் தீயணைப்புத் துறையிடம் இல்லை. மின் கம்பங்கள் மீது மரம் விழுந்தால், வெட்டி அப்புறப்படுத்துவதற்கான உபகரணங்கள் மின் துறையிடம் இல்லை.
எனவே, மழையை எதிா்கொள்ள பொதுப் பணித் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, மின் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகள் இணைத்து 4 குழுக்களை அமைத்து, அந்தக் குழுவுக்கு தேவைப்படும் உபகரணங்களை அரசு வாங்கித்தர வேண்டும்.
அரசு நிா்வாகம் அதிகாரிகளை இரண்டு பிரிவாக பிரித்துவிட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்காக அதிகாரிகள் மீது எப்படி முதல்வா் நடவடிக்கை எடுப்பாா்?
உயா் நீதிமன்றம் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று உத்தரவிட்ட பின்னரும், அனைத்து கோப்புகளையும் தலைமைச் செயலா், துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி வருகின்றனா். எனவே, அதிகாரிகள் மீது நடவடிக்கை என்பது மலிவு விளம்பரம்தான் என்றாா் அன்பழகன்.