புதுவை சட்டப்பேரவை துணைத் தலைவராக காங்கிரஸ் எம்.எல்.ஏ. எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுகிறார்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவராக இருந்த வெ.வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பேரவை துணைத் தலைவராக இருந்த வே.பொ.சிவக்கொழுந்து பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால், பேரவை துணைத் தலைவர் பதவி காலியானது.
இந்தப் பதவிக்கு ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் பாலன் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை துணைத் தலைவர் தேர்தல் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் என்று பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, பேரவை துணைத் தலைவர் பதவிக்கான ஆளும் கட்சி வேட்பாளர்
எம்.என்.ஆர்.பாலன் தனது வேட்பு மனுவை புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.
அவருக்கு பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவைத் தவிர்த்து, காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் உள்ளனர்.
அதேநேரத்தில், இந்தப் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் யாரும் புதன்கிழமை நண்பகல் 12 மணி வரை மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்றி சட்டப்பேரவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான முறையான அறிவிப்பு வியாழக்கிழமை வெளிவரும். அதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழா நடைபெறும்.