இலவச அரிசி திட்டத்துக்கு மாற்றாக வேறு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை மாநிலத் தலைவர்
எம்ஏஎஸ்.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு, இலவச அரிசிக்குப் பதிலாக மானியத்தை குறிப்பிட்ட மக்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தி வருகிறது. எனவே, மத்திய அரசிடம் பணத்துக்குப் பதிலாக அரிசியை வழங்க வலியுறுத்த வேண்டும்.
புதுவை துணைநிலை ஆளுநர் தரமற்ற அரிசி கொள்முதல் செய்து வழங்குவதால், ஊழல் நடைபெறுகிறது என குற்றஞ்சாட்டி வருகிறார். எனவே, முதல்வர், அமைச்சர்கள் தரமற்ற அரிசியை விநியோகம் செய்த ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிந்து, ஆளுநரிடம் தெரிவிக்க வேண்டும்.
மாற்றுத் திட்டத்தை யோசித்து, இலவச அரிசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமே தவிர, ஆளுநருடன் மோதல் போக்கை கொண்டிருக்கக் கூடாது. இதனால், புதுவை மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.